ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!

ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!





சமூக வலைத்தளங்களில் பல படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்து அதன் தரத்தை அதிகரித்து எழுத்தாளர்களின் திறமையை மேலும் வெளிக்கொண்டுவரும் பொதுவான பக்கங்கள் இருப்பது குறைவாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது இந்த முயற்சி அமையும் என நினைக்கின்றேன். ஒரு இரசிகனாக என்னுடைய ஆய்வுகள், விமர்சனங்கள் அமையும். மேலும் அவற்றை துறைசார் விற்பன்னர்களுக்கும் கொண்டு சென்று களம் அமைக்க இது ஏதுவாக அமையும். இதன்படி எனது முதலாவது முயற்சி இதோ...


கவிஞர் சிகரம் பாரதியின் "வாழ வேண்டும்" என்ற கவிதையே எனது இன்றைய பார்வையில்... 




மனிதர்கள் பலரின் இடைக்கால வாழ்க்கையை நிறைக்கும் ஒரு விடயம், தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும், வழிதெரியாது தடுமாறிய பாதையையும் திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் விரக்தி. அத்தகைய ஒரு கவிதையே இது. கவிஞர் தலைப்பிலேயே அதனை விவரித்துவிடுகின்றார். எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு அழுத்தமான நினைவுதான் வாழ வேண்டும் என்பது. சமூக சூழ்நிலைகள் அவற்றினை தீர்மானிக்கின்றன.


தெரிந்தோ தெரியாமலோ நாம் எமது சமூகத்துடனேயே சேர்ந்து பயணிக்கின்றோம். இதனை எல்லோரும் உணரும் சந்தர்ப்பம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆனால் இலங்கையில் மலையக சமூக இளைஞர்கள் அதனை உணர்வது அதிகம். காரணம் உழைக்கும் வயது நீண்ட பயணத்தை தந்து மாற்று சமூகத்தை பார்க்க வைத்த காலங்கள் அதிகம். அதனால் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் போல ஞானம் கிட்டும், ஆனால் நாட்கள் ஓடியிருக்கும். 


கவிஞர் இந்த கவிதைக்கான களத்தை இலங்கையின் மலை நாட்டை பிரதானமாக கொண்டுதான் எழுதியிருக்கின்றார். ஆனாலும் வரிகள் எல்லா சமூகத்திற்கும் பொருந்துகின்றமை எழுத்தாக்கத்தின் சிறப்பை காட்டுகின்றது. 


வளர்ந்துவரும் சமூகங்கள் தான் தற்போது இருக்கும் சூழலில் இருக்கும் தாக்கங்களை முறியடிக்க பெரிய இலக்குகளை தக்கவைத்திருக்கும். ஆனாலும் பழமையான கட்டுப்பாடுகள் இறுக்கமாகதான் இருக்கும். கிராமங்களில் அந்த நிலைமை அதிகமே. அரசியல் மதம் இனம் என பல சவால்கள் இருக்கும்.


இவைகள் நாம் என்னவாக வளரவேண்டும் என்பதை சிறுவயது முதலே தீர்மானித்து விடுகின்றன. அதிலும் சமூகத்தின் பார்வை என்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். 


நீ இதுவாக இருக்க வேண்டும், நீ இந்த தரப்புடனே இருக்க வேண்டும், அரச உத்தியோகம், குடும்பத்தின் தன்மானம், சமூகத்தின் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும், எதிர்காலத்திற்கு வழிகாட்டும் நபராக இருக்க வேண்டும் என்று சிறுவயது முதலே பொறுப்புகள் அதிகமாக இருக்கும். ஒருபக்கத்தில் இது தவறுமல்ல. இருந்தாலும் இவற்றை தாண்டி செல்வதற்கான வழிகளை யாரும் காட்டுவதில்லை. 


இதனையே கவிஞர்  


நீ அதுவாக இரு

இதுவாக இரு 

என்று 

சொல்லிக்கொடுத்த சமூகமே... 

ஏன் என்னை 

நீ 

நீயாக இரு 

என்று 

சொல்லிக்கொடுக்கவில்லை? 


என்ற வரிகளில் காட்டுகின்றார். சொந்த சிந்தனைகளுக்கும், திறமைகளுக்கும் அப்பாற் சென்று, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு அட்டவனைக்கு ஏற்ப வாழ வேண்டும். இதனை தாண்டி சிந்திக்கும் சிலரை அச்சப்படுத்தியே நிலைகுலைய செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உண்டு. இந்த நாலுபேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதற்காகவே திட்டக்கட்டுக்குள் சுருங்கிவிட வேண்டிவருகின்றது. 


அடுத்தது, எதிர்காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வரைந்து அதற்காக போராடுவது. இது பணக்கார வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு திட்டமிட்டு இருக்கும் வாழ்க்கையை தொலைப்பதை பேசுகின்றார் கவிஞர். நிலம், வீடு, சம்பளம், கார், அழகான மனைவி, குடும்பம் என நீண்டுகொண்டே செல்லும். திரைப்படங்களும் இந்த சிந்தனைக்கு வித்திட்டவையே. அனைவரும் ஆடம்பரம் என்றால் அது எப்படி சாத்தியம். இதற்கமைய கிராமப்புறங்களில் இந்த சிந்தனை எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதை கவிஞர் கணக்கில் கூறுகின்றார். இரண்டு கார்கள், மூன்று பங்களா இந்த கணக்கு நிச்சயமாக சினிமா தந்த தாக்கமே.


தான் பாடசாலைக்கு அணிந்து செல்ல ஒழுங்கான ஆடை, காலணி என்பன கிடைப்தே பெரும்போராட்டமாக அமைந்த அந்த காலத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு அரச உத்தியோகமும், கல்வியும்தான் என சிந்தித்திருந்த காலங்களே அவை. படித்தால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என கூறிய சமூகம் எப்படி படிப்பது, எதுவரை படிப்பது, எதனை படிப்பது என்ற சிறந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்காது போனமை பல கனவு கனவான்களை கனவிலேயே கலைத்துவிட்டது. 


"அழகான மனைவி, வெள்ளை பிள்ளைகள்" இந்த இரண்டு வரிகளிலும் தான் வறுமை எப்படி இருக்கும் என்பதை காட்டியிருக்கின்றார் கவிஞன். கூலித்தொழிலில் தன் அழகை இழந்து வறுமையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தில் இருக்கின்றது என்பதை சிந்திக்க வைத்ததை காட்டுகின்றது. அத்துடன், வறுமையில் கறுத்த மேனியுடைய பிள்ளைகளும், தன் அழகை கவனிக்காத பெண்களும் அவன் சூழலில் இருந்ததே அவனின் மாற்று சிந்தனைக்கு காரணமாக அமைந்தது. மனதில் ஆசைகள் இருந்தும் கையின் வெறுமை கவிதையில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது.


"நிரந்தர வேலை 

கண்ணில் கண்ட 

அனைத்தையும் 

வாங்க தேவையான சம்பளம் 

சிகப்பான மனைவி 

வெள்ளையான பிள்ளை 

இரண்டு கார் 

மூன்று பங்களா

இது தானா 

நீ 

சொல்லும் வாழ்க்கை?"


முதலிலேயே கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் போல ஞானம் கிட்டும் என்று நான் கூறிய வார்த்தைகளை விரக்தியின் உச்சக்கட்ட நிலையில், சமூகத்தின் காதுகளை கிழக்க முற்படுகின்றார் கவிஞர். உண்மைதான் தான் நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக போராடியிருக்கலாம். அவைகள் நாளடைவில் வளர்ச்சியை தந்திருக்கும். அது சமூகத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும். மாறாக தன்னை வருத்தியதற்கும் அர்த்தமின்றி, எதிர்கால சமூகத்திற்கும் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. இயற்கையோடு வாழந்திருக்கக் கூடிய அழகான வாழ்க்கையை, கனவில் வாழவேண்டியதாக போனது. சொந்த ஊரைவிட்டு, உறவுகளை விட்டு, வெளிநாடு, வெளி ஊர் என தனிமையே வாழ்க்கையானது.  


"ஏன் 

ஓலைக் குடிசையில் 

வாழ்பவன் மனிதனில்லையா? 

இலட்சியத்துக்காக 

போராடுபவன் 

சமூக எதிரியா? 

கறுப்பான பெண்ணை 

காதலித்தால் 

ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?"


இனிதான் வாழ்க்கையின் கனவுகளிலேயே வாழ்ந்த கனவான்களின் சிந்தனையில் புதிய எழுச்சி. தான் இழந்த அந்த அத்தனை காலங்களையும் தமது பிள்ளைகளுக்காவது பெற்றுக்கொடுத்து, அவர்களை சுயமாக சிந்திக்க செய்வதாக திட்டங்கள் பிறக்கும். அதுவும் ஆபத்தே. ஏன் தெரியுமா, சுயாதீனத்தன்மையின் கட்டை முற்றாக உடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அவை சுதந்திரத்தால் தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும். மற்றையது ஆடம்பர வாழ்க்கையின் விரக்தியை உள்வாங்கி நடுநிலை வர்க்கமாக மாறவும் கூடும். எதுவாயினும். இயல்பான சிந்தனைகளும், இயற்கையோடு கூடிய வாழ்க்கையும், கூட்டு உறவுகளும், குடும்பமும், அரசியலற்ற நட்பும் கிராம வாழ்க்கையில் நிறைதிருக்கும். அதனையே அறிவோடு வளர்ப்பது தற்காலத்திற்கு பெரிதும் பொருந்தும். இவ்வாறு கவிதையை தீர்வோடு தருகின்றார் கவிஞர். மொத்தத்தில் விரக்தி முடிவில் சுதந்திர சிந்தனையாயிற்று.


நன்றி.


கவிஞர் சிகரம் பாரதியின் கவிதையை முழுமையாக வாசிக்க.... 

https://newsigaram.blogspot.com/2021/04/blog-post.html 


ஆய்வு

ஆர்வலர் 

செல்லசாமி நிலோசன்.


உங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.

உங்களின் படைப்புகளையும் எனக்கு அனுப்பிவையுங்கள். ஆராய்ந்து விளக்க தயாராக இருக்கின்றேன். 

niloshan3@gmail.com 

Comments

  1. எனது கவிதையை மதிப்பாய்வு செய்திருக்கிறீர்கள். சிறப்பான நடை. சிறந்த பார்வை. தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. சிறப்பான நடை... சிறந்த பார்வை... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... உங்கள் வரவு தொடர்வரவாக அமையவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு...

      Delete
  3. அழகிய கவிதைகளுக்கு பட்டை தீட்டிய வைரமாக ஆய்வு செய்து விவரித்த விதம் அருமை நண்பரே

    தொடரட்டும் தங்களது பணி.... - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... உங்களின் வரவை நான் தினமும் எதிர்பார்க்கிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் அழகான நாட்கள்...!

அவளும் நானும் கனவில்...