அவளும் நானும் கனவில்...
ஆடிக் காற்றில் ஆங்கோர்
ரோஜா சிரிக்கக் கண்டேன் ;
மரங்களை முறித்திடுங் காற்றோ
மலரைப் பல்லக்கிற் சுமந்திற்று!
வளைந்து மண்ணைத் தொட்டிடு
மரங்கள் பந்தல் ஆயிற்று ;
ஒடிந்து சிதரும் இலைகளதே
அங்கே தோரணம் ஆயிற்று!
பறித்துப் பறக்கும் பூவிதழ்
அனைத்தும் கம்பளம் விரித்தது ;
இலைவழி தெறிக்கும் நீரோ
பளிங்கு முத்துக்கள் தூவிற்று!
மல்லிகைக்கூட்டம் பன்னீர் ஆயிற்று
மற்றபூக்களோ சாமரம் வீசிற்று ;
விழிமூடி ஒதுங்கிய கூட்டம்
தவறுணர்ந்து தவித்தே போயிற்று !
அப்போது விழித்தோர் அனைவருமே சிலையழகில் சிறையினர் ஆயினர் !!
வண்ணந்தீட்டும் வண்ணத்துப் பூச்சியும்
தேன்துளி தெளிக்கும் தேனீக்கூட்டமும் ;
நிழற்குடை பிடித்திட்ட குருவிப்படையும்
பல்லக்கின் கூடவே பறந்தனலாயிற்று !
வேகமுங் கோபமும் வாளுமீட்டியும்
விழிநேரே பாய்ந்திட்ட அம்பும் ;
எனையே வந்து தொட்டிடத்
துடிக்கும் கடார இரும்பும் !
போரினிடையே புகுந்த இவளுக்கு
மொத்த விழிகளும் ஆரத்தியிட்டது !!
வேங்கை யானோ வீசியவாளில்
பிளந்தஅம்பின் விரிசல் ஊடே ;
கொள்ளை அழகைக் கொள்ளை
அடித்திடும் கொள்ளையன் ஆனேன் !
வீசிய வாளை உறையினிலிட்டு
மங்கை முன்னே மண்டியுமிட்டு ;
வீரபுருஷன் எனக்கை உயர்த்தி
கண்கள் காட்டி அழைக்கலானேன் !
மேகம் விலகிட நிலவவள்
தெரியும் இரவைப் போலே ;
பல்லக்குத் துணியும் விலக
என்னை ஒளியில் நிறைத்தாள் !
மூச்சைப் பிடித்தே எந்தன்
விழியை உயர்த்தி பேசலானேன் ;
நீட்டிய கையில் எந்தன் விரல்கற்பிடித்து நெருங்கிட லானாள் !
போரில் வீசிய புயற்காற்றில்
புதைந்த வியர்வை ரத்தவாடை ;
மலரவள் வரவில் இங்கே
மயக்கிட மணக்க லாயிற்று !
படர்ந்த நெஞ்சில் பிஞ்சுக்
குழந்தைக் கால்கள் போலே ;
கைகள் வைத்துச் சாய்ந்தே
குழந்தை போலே நின்றாள் !
முகம்படர்க் கூந்தலை நானும்
விலக்கி யணைத்துக் கொண்டேன் ;
வஞ்சியவள் கண்ணந் தொட்டு
விழியால் என்னெனக் கேட்டேன் !
கள்ளியவள் இமைகற் சுருக்கி
..... வேண்டும் என்றாள் ;
மறுப்பதுபோற் யானும் விலகிட
கைகள் பிடித்தே
கட்டியணைத்தாள் !
முற்றிச்சிவந்த முல்லைப் பூவை
முறுவலோடு யானும் அள்ளிட ;
சென்றிடு நீயும் விரைந்தே
என்னைச் சேர்ந்திட என்றாள் !
மறுத்திட எனக்கோ மறந்திட
மயக்கதில் நானும் மடிசாய ;
குழந்தை எனவே அவளே
என்னைக் கொஞ்சிட லானாள்...
குழைந்திடு மனமது சேர்ந்திட
கூட்டினுள் இருக்கும் குருவிகளானோம் ;
காற்றைக் கிழித்துப் பறக்கும்நானோ கிளியிடம் சிக்கிய பழமாயானேன் !!
சிறப்பு.
ReplyDelete//மறுத்திட எனக்கோ மறந்திட
மயக்கதில் நானும் மடிசாய ;
குழந்தை எனவே அவளே
என்னைக் கொஞ்சிட லானாள்...//
வரிகள் அருமை. படத் தெரிவுகளும் சிறப்பு. ரசித்தேன்....!
உங்கள் கருத்துக்களினால் மகிழ்ந்தேன்.
Delete